Saturday, July 02, 2005

 

அந்த பச்சை மனிதர்கள்!

கல்லூரி வகுப்பு முடிய நான்கு மணி ஆகிவிட்டது. மதியம் சாப்பிட்டு இருக்கவில்லை. ஒரு மணி நேர பேருந்து பயணத்தை நினைத்தால் சோர்வாக இருந்தது. அம்மா செய்து வைத்திருக்க போகும் தோசையையும் சட்னியையும் நினைக்கையில் சிறிது புத்துணர்ச்சி வந்தது. நிரம்பி வழிந்த பேருந்தில், உயிரை பணயம் வைத்து, தாவிப் பிடித்து ஏறி, கூட்டத்தில் கசக்கிப் பிழியப்பட்டு, நடத்துனரிடம் சில்லறை தராததிற்காக திட்டு வாங்கி, ஒரு வழியாக ஐந்தே காலுக்கு வீடு வந்து சேர்ந்தேன். அதிர்ச்சி! வாசற்கதவில் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. கூடவே ஒரு சிறு காகிதம். " எதிர் வீட்டில் சாவி வாங்கிக்கொள். உன் மாமா வீடு மாற்றுகிறார். உதவிக்கு அழைத்தார். எட்டு மணிக்குள் வந்து விடுவேன்." அம்மாவின் கையெழுத்து, என் தலையெழுத்து! அம்மா மீது கோபம் கோபமாக வந்தது. பசி! ஆ! எதிர் வீட்டு மின்னல்! திடீர் திடீரென காட்சி தரும் அந்த மின்னல் பெண்ணிடம் பேச இது ஒரு சந்தர்ப்பம். அம்மாவிற்கு ஜே! அந்த காகிதத்தை கசக்கி எறிந்து விட்டு எதிர் வீட்டை நெருங்கினேன். வேகமாக அடித்துக் கொண்டிருந்த நெஞ்சை ஒரு பெருமூச்சால் சாந்தப்படுத்திக் கொண்டு கதவை தட்டினேன். கதவை திறந்தவள் அவள்தான். "யெஸ்!" என்றாள். "அம்மா... சாவி... எதிர் வீடு.." ஏன் இப்படி பதற்றம். "ஒரு நிமிஷம்." உள்ளே சென்று மறைந்தாள். நானும் உள்ளே போவதா? எதற்கு வம்பு? மறுபடியும் தோன்றினாள். சாவிக் கொத்தை நீட்டினாள். கை பட்டு விடாமல் எடுத்துக் கொண்டேன். சிறிது நேரம் மௌனம். "எந்த காலேஜ்?" என்று கேட்பதா? "வேறு எதாவது.." அவளே முந்திக் கொண்டாள். "ம்.. ம்.. இல்லை.. ஒண்ணும் இல்லை.. தாங்ஸ்.." வேறு ஒன்றும் சொல்லாமல் கதவை சாத்திவிட்டாள். சே! குறைந்தபட்சம் பெயரையாவது கேட்டிருக்கலாம். "முட்டாள்!" என்னை நானே நொந்து கொண்டேன்.

வீட்டிற்குள் நுழைந்தேன். ப்ரிட்ஜில் இருந்த ரொட்டியில் வெண்ணெய் தடவி சாப்பிட்டுக் கொண்டே டீ.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை. "டொக்! டொக்! டொக்!" கதவு தட்டப்பட்டது. தூக்கக் கலக்கத்தோடு போய் திறந்தேன். யாரும் இல்லை! "சே!" என்று திரும்பிய போது தகரத்தில் நகம் கீறும் சத்தம் போல ஒரு சத்தம் எழுந்தது. மறுபடியும் திரும்பிப் பார்த்தேன். என் இடுப்பளவு உயரத்தில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். பச்சை நிறத் தோல். சிவந்த உருண்டை கண்கள். இரண்டு கொம்புகள். எனக்கு சிரிப்பாக வந்தது. "என்னடா பசங்களா! ஸ்கூல் டிராமாவிலிருந்து நேரா வரீங்களா?" மறுபடியும் அதே தகரச் சத்தம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவன் கையில் குழாய் போன்ற உபகரணம் இருந்தது. அதை வாயருகில் கொண்டு சென்றான். இப்போது சுத்தத் தமிழில் குரல் கேட்டது. "நாங்கள் வியாழன் கிரகத்தில் இருந்து வருகிறோம்." எனக்கு மேலும் சிரிப்பு வந்தது. "ம்.. அப்புறம்.." நக்கலாகக் கேட்டேன். இன்னொருத்தன் இடது புறம் கை காட்டினான். மூன்றே விரல்கள்! அவன் காட்டிய திசையைப் பார்த்தேன். முதலில் ஒன்றும் புரியவில்லை. கண்ணை கசக்கிக் கொண்டுப் பார்த்தேன். ஒரு சிறு குன்று அளவு கொண்ட அமைப்பு, நான்கு கால்களுடன் நின்று கொண்டிருந்தது. ஐயோ! அப்படி என்றால்.. நிஜமாகவே...
"சங்கர்! எங்கள் தலைவர் அனைத்து கிரக வாசிகளையும் சேகறிக்கிறார். உங்களை பாடம் செய்து கண்ணாடிக் கூண்டில் வைக்க இருக்கிறோம். பெண் இனத்தில் அந்த வீட்டின் பெண் ஏற்கனவே எங்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டாள். எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் வியாழன் கிரகம் வரை உயிரோடு இருக்கலாம். இல்லை என்றால் எங்கள் கதிர் வீச்சு துப்பாக்கி உங்களை இங்கேயே கொன்று விடும்.." அவன்.. இல்லை.. அது சொல்லிக் கொண்டே போனது. என் இதயம் வாய் வழியாக துள்ளிக் குதித்து விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு படபடத்தது. என் கையைப் பிடித்துக் கொண்டு அவர்கள் நடந்தனர். என் கால்கள் தானாக நடந்தன! எதிர் வீட்டு மின்னல்! ஐயோ! அவளுக்கும் இதே கதியா?

திடுக்கென விழித்துக் கொண்டேன். குப்பென்று வியர்த்திருந்தது. எல்லாம் கனவா? என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இது கண்டிப்பாக நினைவுதான்! நான் கண்டதுதான் கனவு.

"டொக்! டொக்! டொக்!" கதவு தட்டப்பட்டது. இப்போது யாராக இருக்கும்? மெதுவாகப் போய் திறந்தேன். இரண்டு கொம்புடைய பச்சை மனிதர்கள். ஆ!!

Click here to view this post as a PDF file
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?